மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

கனவு கலையும்போது...

கனவு கலையும்போது...

கனவென்பது ஒரு கிறக்கம்...
நடப்பது அனைத்தும் உணர்வே...
வானில் பறப்பதும் கால் தடுக்கி
பள்ளத்தில் குப்புற வீழ்வதும்,

கடவுளைக் காண்பதும் பேருந்தை
தவற விடுவதும் விபத்தில் அடிபடுவதும்
தாயோ தந்தையோ தமக்கையோ
தம்பியோ சட்டென்று இறப்பதும்

காலம் கடந்து மறந்து போன பரிட்சை
அறைக்கு நேரம் கடந்து வருவதும்,
பரீட்சை எழுதுகையில் சமன்பாடோ
இல்லை இரசாயன விதி மறப்பதும்,

நேரே விமானம் வெடித்து விழுவதும்
முகமறியாப் பெண்ணைப் புணர்வதும்
வழியெல்லாம் பணமாய் தெருவெல்லாம்
தங்கக் காசு இறைந்து கிடப்பதும்

பொறுக்கி மாளாமல் தவிப்பதும்
விரும்பும் நடிகனுடன் விருந்துண்பதும்
ஏதோ ஒரு வீடு நம் வீடு போல் உணர்வதும்
என்றோ மறந்த நண்பன் நேரே வருவதும் ...

கனவில் அத்தனையும் நடப்பது சகஜம்...
விழித்து எழுந்ததும் தினக்கவலைகள்
குமிழாய் மேலெழுந்து கனவின் திவலைகள்
மறைந்து கடமைகள் கனவை மறக்கடிக்கும் ..

அன்றைய கனவு குறித்து சட்டென்று
நினைவு அசை போடுகையில் மனசு
கண நேரம் லேசாகி கனவுலகில் அலையும்
அந்நேரத்திற்கு இல்லை ஒரு விலையும்....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: