மொத்தப் பக்கக்காட்சிகள்

14 பிப்., 2008

காதல் கவிதை - சென்னைத் தமிழில்!::::நாகராஜன்:::

காதலர் தின வாழ்த்துக்கள்

வாரவதி மேல குந்திக்கினு கீறேன்...
வாத்யாரே வராங்காட்டி பேஜாராப் போறேன் ...

காவாக் கஸ்மாலம் கப்பு அடிக்கிது...
மூச்சு புடிச்சா மப்பு அடிக்கிது..

மைனரு மன்னாரு கண்டுக்கினு போறான்..
மஜ்ஜானம் உதாரா வூட்டாண்ட வர்றான் ...

கபால்னு மச்சான் நீ வா மண்ணடி ரோட்டுக்கா...
கபாலி நெஞ்சில மஞ்சா சோத்தை எடுத்துக்க ...

சொம்மாங்காட்டியும் குந்திக்கினா பீலிங்கா கீது..
மச்சான் நீ இல்லாமே படா பேஜாரா போவுது...

நீ இல்லாமே மனசு சொம்மா புஸ்ஸுன்னு கீது...
நெனப்பெல்லாம் எங்கேயோ இஸ்துகினு போவுது...

லவ்வுல இம்மாம் பேஜாரா கீதே?
கண்ணாலம் கட்டுனா கரிட்டாப் போவுமா?

ரோட்டுல போறவன் கண்ணெல்லாம் அடிக்குறான்...
பீச்சாங்கை பக்கமா சொம்மா வரியாங்கறான்...

மஜ்ஜானம் முல்லா கூப்புட வராங்காட்டி நான்
மைனரு மன்னாரோடெ ஜகா வாங்கிப் பூடுவேன் ....

பிரியாணி பொட்டலம் பிரிக்காத மாதிரி...
பிரிஞ்சிக்கோ மச்சான் முண்டச்சி மனசெ...

::::நாகராஜன்:::

தமிழ்த்தாயே என்னை மன்னிப்பாயா.. உன் மொழியை நான் களவாண்டதிற்கும் மேலே இருப்பதை கவிதை என்று சொன்னதிற்க்கும்...

உலோபி வீட்டு உரிப்பானை ...

உலோபியின் வீட்டின்
கூரையில் தொங்கும்
ஒன்றிரண்டு உரிகள்....

உத்திரத்தில் தொங்கும்
உள்ளே உள்ளது
என்றும் வெளியே வாராது...

காலம் அழிக்கும் அதை
கவலை இல்லை
உலோபிக்கும்...

காலம் மாறும்....
கவலையும் வரும் கையும்
கூப்பும் கடவுளின் முன்...

காலத்தில் செய்யா கருமங்கள்
அனைத்தும் கூட்டிச்
செல்லுமோ சொர்க்கம் வரை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் வரும்..

வாழ முடியாதான் வாழ்விற்கு
வழியுண்டோ என்று யோசி..
இல்லை என்றாலும் பலரிடம் யாசி..

தோள் கொடு முடியாதவன்
முதுகிற்கு... பாதியைப்பிரி
சுமப்பவன் பாரத்தை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் தெரியும் ..

:::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்... :::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்...

படிக்கும் காலத்தில் தளையும் வெண்பாவும்
தலையில் ஏறவில்லையா இல்லை தமிழ் பிடிக்கவில்லையா?

அடுத்தவன் கவிதை மனதை துளைக்கும்போது
கை பரபரத்து கவிதை எழுத துடிக்கிறதா?

வா... கவிதை எழுதுவோம்... உனக்குள் உணரும்
உணர்வுகளுக்கு வரி வடிவம் கொடுப்போம்...

மனசு உணர்ந்ததை வரிக்குள் கொண்டு வா..
பிறப்போ இறப்போ பூப்படைந்ததோ புஷ்பித்ததோ..

பிரிவோ சந்திப்போ பிள்ளையோ பெருமையோ
கடவுளோ தாசியோ மனிதனோ மிருகமோ..

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் யாவும் மற...

கைக்கு வந்ததை கிறுக்கிப்பார்,...
கிறுக்கிய வாக்குகளை குறுக்கிப்பார்....

வரிகளின் முதல் வாக்கு முக்கியம்....
ஒலிக்க வேண்டும் ஒரே மாதிரி அவை..

குறைக்கு குரையும் நிறைக்கு நிரையும்
எழுத்துக்குக் கழுத்தும் யானைக்குப் பானையும்...

எண்ணிப்பார் எத்தனை வாக்குகள் அறிவாய் நீ...
அத்தனையும் வரிசையாய் வரியாக்கிப்பார் ...

முடியும் வாக்குகள் அனைத்தும் மோனை என்பார்..
மோனைக்கும் எதுகைக்கும் அதே இலக்கணம்....

முடியும் வாக்கிற்கும் வார்த்தைகளை விரி...
படியும் என்றால் விடியும் மாலைக்குக் காலை...

எதுகையும் மோனையும் உனக்குக் கீழ் படிந்தால்
சந்தமும் படிமமும் உன் வசப் படும்....

பின் ஒரு வரிக்கு நான்கு நான்காய் வார்த்தைகள்..
முன் அனுபவம் வேண்டாம் கவிதைக்கு...

இரு வரி கவிதை வெண்பா...நான்கு வரி செய்யுள்
ஆறுவரி விருத்தம் அளவில்லா வரிகள் இலக்கியம்...

எதுகை மோனை சந்தம் படிமம் நான்கும்
இருந்தால் நீயும் ஒரு கவிஞன்....

தமிழ் உன் தாய்.. பிழை செய்தாலும் பொறுப்பாள் ...
எழுது அவளை கணினியிலோ அல்லது கவிதையிலோ...

உணர்வுகள் அவசியம் கவிதைக்கு.. உணர்ந்ததை
வரிக்குள் ஊசி போல செலுத்து, செம்மைப்படும் உன் கவி...

மொழியோ வார்த்தைகளே வேண்டாத ஒரு சில கவிதைகள்
எண்ணியதுண்டோ எப்போதேனும்.. கீழே பார் சிதறியதில் சில....

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் எதுவும் வேண்டாம்..

குழந்தையின் சிரிப்பு, ஒரு கூடை நிறைய பூக்கள்
கிழவியின் கனிவு, மழைக்குமுன் சில நொடிகள்...

யானையின் அசைவு, ரயிலின் கடப்பு
மார்கழி காலைக் குளிர், மனைவியின் அரவணைப்பு...

காதலியின் முத்தம், கடல் அலையின் சத்தம்
பிரிந்து சேர்ந்த தாய் சேயின் அழுகை..

வருஷக் காலண்டரின் காகிதப் படபடப்பு..
வரிக்குதிரையின் நிறம், வாரி சுற்றிய பெண்ணின் முடி..

குழந்தையின் கையில் காற்றாடி, கிழவனின் பொக்கை வாய் சிரிப்பு..
வறுமையிலும் சொந்தங்களோடு நடைபாதைக் குடும்பம்...

வா, உணர், வந்து எழுது, பேனாவில் தமிழ் மை நிரப்பு...
வெளியே கொட்டும் வரிகளும் கோடும் கவிதைகளாகட்டும் ...

முயன்று பார்...முடியும் உன்னால்... வா இங்கே
உட்கார்… ஒன்றாய்ச் சேர்ந்து கவி எழுதுவோம்...

:::நாகராஜன்:::