மொத்தப் பக்கக்காட்சிகள்

19 பிப்., 2008

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும் :::நாகராஜன்::::

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும்

இரைச்சலோடே வரும் வெளியில் நீர் குடிக்கும் முட்டி உருளும்
இடியுண்டு கூட்டமாய்ப் புரளும் வேண்டும்போது வாராது
பள்ளத்தில் நிற்கும் சாலையில் ஓடும் முன்னே வெளிச்சம் வரும்
தெப்பலாய் நனைக்கும் கார் என்பார் மழையும் பேருந்தும்

:::நாகராஜன்::::

உயிரின் இரகசியம்.....:::நாகராஜன்:::

உயிரின் இரகசியம்.....

ஞானம் தந்தான் மானம் தந்தான்
வானுளன் பெருமைக்கு வரிகள் போதா...

உலகம் யாவையும் உளவாக்கலும்
நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கலும்

அலகிலா விளையட்டுடையானவன்
தலைவன் அன்னவர்க்கே சரணம்

பற்றற்றவன் உற்றிய பாதம்
பற்றுதலாம் பரம பதம்....

நீரில் பாசி போல நிலத்தில்
வேரு போல பற்றில்லாதவனவன்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஞானம்
ஆறுணர்வு தந்தவன் தாளே பற்றுக

நெஞ்சே அறி! ஞானம் சொன்னதைக்கேள்!
படைப்பின் இரகசியம் அறிவாய் நன்னெஞ்சே..

காணா வாயுக்கள் இரண்டாம் அவை
கலப்பதால் வரும் காணும் தண்ணீராம்....

நீராக வாயு விகிதம் வெப்பம் வேண்டும்
நீர்பிரிந்து ஆவியாகும் எதிர்மறை விதியில்

விதை உறக்கம் அறிவாய் நீ... நீரின்றி நிலமின்றி
உயிர் உள்ளடக்கி உறங்கும் எழுப்பும் வரை

விதை விழித்தெழ வேண்டுதல் இரண்டேயாம்
நீரும் சுவாசமும் பற்றிக்கொள்ள பிடியும்

மண்ணில் நீர் சேர பூமியில் பிடிக்கும்
தாழ் பரந்து உயர் வளரும் மரம்

விஞ்ஞானம் இல்லை உயிர் விளக்க
மெய்ஞானம் உண்டு தெளிவிக்க

உரைப்பேன் கேள் உயிர்பற்றை,
உடன்பட்டால் உபதேசிப்பேன்...

நிலம் காற்று நீர் தீ என்பது
பூதங்கள் என்பார் பூவுலகில்

நிலம் என்பது தாது உப்பு
காற்றென்பது பிராணவாயு

நீர் என்பது உடலில் தண்ணீர்
தீ என்பது உடலில் வெப்பம்

இவை அனைத்தும் உண்டிப்புவியில்
கலவை விகித சூட்சுமம் அவன் கையில்

சரிவிகிதம் கலவை சேர்கையில்
உடல் எனும் வேதி உண்டாகும்

உண்டான வேதியுடல் புலன்
உணர்வதுதான் உயிர்ப்பாகும்

கருவூரில் பிறந்து பையூரில் உறங்கி
மெய்யூரில் வளர்ந்து பாழுரில் தங்கி

பற்றற்றவன் பாதம் பற்றி நான்
வாழூர் செல்வது எக்காலம்?

உணர்வது முதலில் ஓர் அணுவாய்
அணுவின் பின்னே புழுவாய்

புழுவின் பின்னே மச்சமாய்
மீனின் பின்னே பறவையாய்

பறவையின் பின்னே விலங்காய்
விலங்கின் பின்னே மனிதனாய்

மனிதனின் பின்னே பேயாய்
பேயின் பின்னே பூதமாய்

பிறப்பென்பார் இதை ஏழு
சன்மம் என்பார் உடல் வதை

சகடச் சுற்றில் மீண்டும் நீ
புழுவாய் பிறப்பாய்

அல்லது தேவனாவாய் அது
உள்ளது உன் கையிலாம்

சரிவிகிதம் கண்ட உயிர்க்கு
விகிதம் மாற விதி மாறும்

காற்றிழந்தால் மூச்சில்லை
நீரிழந்தால் மூப்பாகும் கண்டாய்

தாதுப்புப் பிழையின் சலம் நிற்கும்
சூடிழந்தால் சுடுகாடே..

விகிதம் கலைந்தால் மரணம் உணரும்
உயிர்ப் போகும் வேதி உடல் அது உணரும்

விதி முடிந்ததென்பார் அது வலியதென்பார்
காலம் போனதேன்பார் காலன் வந்ததென்பார்

காலை மாலை காற்றை அடக்கினால்
கடவுள் அருகில் என்பான் அந்தணன்

கூடுதல் ஆயுள் தேடுதல் கூடும் என்பான்
அந்தணன் செய்வது கூடு புதுப்பிதலாம்

காற்றின் சூட்சுமக்கயிர் பற்றியவனை
புலன் அடக்கினால் காண முடியுமோ?

நூல் பிடி விட்டால் சாவான் அந்தணன்
சூத்திரம் மறந்த சூத்திரன் அவன்

புலன் அடக்குதல் பெருமை என்பான்
சித்தனும் அந்தப் புத்தனும்

புலன் அடக்கிப் பசியடக்கி உன் விகிதம்
நீயாய் கலைக்க உனக்கில்லை உரிமை...

உடல் வருத்தும் மெய்ஞானம்
காண்பான் முனியும் சமணனும்

யோகமும் போகமும் கடவுளைக்காணா
யாகமும் தொழுகையும் நமக்கின்னா..

கள் குடித்து கஞ்சா அடித்து கண்டேன்
கடவுள் என்பான் ஞானமில்லாதவன்

உடல் ஒரு கருவியாகும் என்றுணர்
உயிர் என்பது நீரில் பாசம் போல் என்றறி...

உடல் சூடு குறைகையில் ஆவி பிரியும்
ஆவிபோனால் கூடு மயானம் போகும்

அழுது புரள்வார் மனைவியும்
மக்களும் கிடத்திய சடலம் முன்பு

எரித்த பின் மயானம் ஒருமுறை
ஏனும் திரும்பி நோக்கார் மீண்டும்

உடைமையும் உற்றாரும் உடன் வர மாட்டா
கடமையும் தருமமும் செலுத்தும் உன் வழி

பற்றினால் உண்டு துயர் துன்பம்
பற்றற்றால் உண்டு என்றும் இன்பம்

திரண்ட முலை உருண்ட தொடை
கருத்த விழி பெருத்த சடை

தங்கம் வெள்ளி கூரை நிலம் பணம்
மக்கள் கிழத்தி சுற்றம் சிநேகம்

போகமாம் இவையனைத்தும்
பாசமாய் பற்றி ஈர்க்கும் உனை

பெண்ணோ பொருளோ பற்று வைக்காதே
புண்ணாக்கும் உன்னுடன்தான் வாராதே

தாளை அறுத்தல் கடினம் தான்
அறுத்த பின் உண்டு வீடுதான்

ஒன்பது வாசல் உண்டென்று காண்
வந்து விழுந்தது ஏதென்று பார்

பீளையும் சீழும் உமிழும் மலமும்
சளியும் வியர்வையும் சலமும்

புலனைந்தையும் சற்றே அடக்கிப்பார்
புலமாள்வாய் பெரியோர் சொல்வார்

ஆசையை அடக்கிப்பார் மடமே
பார் அடக்கும் சித்தி வருமே

கொண்டுவரவில்லை கொண்டு போவதில்லை
நீஎன்பது யாரென்று உனக்குள்ளே கேள்...

வழியில்லை விஞ்ஞானத்தில்
விடையுண்டு மெய்ஞானத்தில்….



:::நாகராஜன்:::