மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

அநாதை...

அநாதை...

பாடையில்லை பல்லக்கில்லை
புரண்டழுவார் யாருமில்லை...
நாக்கு துருத்தி நடனம் ஆட
அரை நிஜார் ஆட்களில்லை..
வழியெல்லாம் இறைத்துப் போக
கூடை நிறையும் பூக்களில்லை ..
நாராயணின் தெய்வீக சப்தம்
சங்கு இல்லை சேகண்டியில்லை...
வீதிவரை தலைவிரித்துக் கதற
தெருப் பெண்டிர் ஒருவருமில்லை...
நார் சுற்றிய புதுச் சட்டியில்
புகையும் தீக் கங்குகளுமில்லை...
தோள் கொடுத்து தூக்கிச் செல்ல
தமையன் தாயாதி யாருமில்லை ...
தலையாரியின் தலைமையில்
நாராயணக் கொள்ளியாம்...
பிள்ளையோ பெண்ணோ பிறக்காமல்
வாழ்ந்து முடித்த மூதாட்டிக்கு ...
கடைசி நிமிட கிராமத்துப்
பயணம் இதுதான் என்பதறிவீரோ?

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: