மொத்தப் பக்கக்காட்சிகள்

15 ஜன., 2008

தலைப்பில்லாக் கவிதைகள்: :::::நாகராஜன்::::

கொளுத்திப் போட்டேன் மரத்தின்மேல்
காடு இழந்தது ஒரு மரத்தை.......
கொளுத்திப் போட்டேன் மதத்தின்மேல்
நாடு இழந்தது மனிதத்தை ....
--------------------------------------------------------------
அவள் விற்கும் புகையிலை போல்
கிழவியின் முகத்தில் சுருக்கங்கள்
அத்தனை சுருக்கமும் அனுபவங்கள்....
---------------------------------------------------------------
குறி சொன்னார் சாமியார் எதிர்காலம் பற்றி
கூட இருந்த கைதிகளுக்கு....
--------------------------------------------------------------------
மின்னலுக்கும் வர்ணமுண்டோ?
இல்லை வானத்தில் மத்தாப்பூ...
-------------------------------------------------------------------
அரசியலுக்கு வர விருப்பமில்லை
தொலைக்காட்சியில் துண்டு காட்சியில்
தலை காட்டும் வரை ....
--------------------------------------------------------------------
வித விதமாய் துணிவகைகள்
நெய்தது கைத்தறி இயந்திரம்
கோவணத்துடன் நெசவாளி
--------------------------------------------------------------------
செட்டியார் ஒரு நாள் செத்துப்போனார்
வாய்க்கரிசி ரேஷன் கடையிலிருந்து....
--------------------------------------------------------------------
இருந்தவரை கவனிக்கவில்லை....
சுவற்றில் மாலை போட்டு மாட்டியாச்சு
அப்பாவின் நினைவுகளை.....
-------------------------------------------------------------------
யாரும் சொல்லித்தரவில்லை.....
சுபாவம்தான் அது சுவற்றில் சிறுநீர் கழிக்க நாய்க்கு....
-------------------------------------------------------------------
ஒரு வாய் தேநீருக்கு மருமகளிடம்
தெரிவிக்கத் தவித்தபோது புரிந்தது
இறந்துபோன மனைவியின் அருமை.......
--------------------------------------------------------------------
சட்டையில் கைவிட்டு திருடியபோதும்
தோன்றவில்லை அழுவதற்கு...
அப்பாவின் தேய்ந்த விரலிடையில்
மசிக்கரை காணும் வரை.......
-------------------------------------------------------------------
நான் நானாக இல்லை காதலித்த போது...
நீ நீயாக இல்லை கல்யாணமான பின்பு....
-------------------------------------------------------------------

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல சிந்தனைகள்
- தர்மா
பாங்காக்

பெயரில்லா சொன்னது…

This collection is very good

Unknown சொன்னது…

edhaarthamaana unmaigal.therindhum vaayaaitthu pogirom endha kaaranatthinaalo theriyavilla....